Sunday, December 31, 2006

தீர்ந்தது திருமுக வாட்டம்!

'வாருங்கள் பட்டர்பிரானே. தங்களுக்காகத் தான் காத்திருக்கிறேன். திருமுழுக்காட்டும் இப்போது தான் நிறைவு பெற்றது. எம்பெருமான் பீதகவாடை அணிந்து கொண்டு தேவரீர் கொண்டு வரும் திருத்துழாய் மாலைகளுக்காகவும் பல்வகை பூமாலைகளுக்காகவும் காத்திருக்கிறான்'.

'திருமுழுக்காட்டு ஆகிவிட்டதா? அடடா! என்றும் திருமுழுக்காட்டு காண வந்துவிடுவேனே. இன்று திருத்துழாய் சிறிது குறைந்தது என்று இரண்டாவது முறை சென்றுப் பறித்து வந்து மாலையைத் தொடுத்ததால் சற்று நேரமாகிவிட்டது பட்டரே. எப்படியோ பெருமானை வெகு நேரம் காக்க வைக்காமல் நேரத்திற்கு வந்தேனே. இதோ மலர் மாலைகளும் திருத்துழாய் மாலைகளும். ஆலிலைப்பள்ளியானுக்குச் சாற்றுங்கள்'.

'விட்டுசித்தரே. திருமுழுக்காட்டு நடக்கும் போதெல்லாம் எம்பெருமான் திருமுகமண்டலத்தில் புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது. ஆனால் சிறிது நேரமாக அவன் திருமுகத்தில் வாட்டம் தெரிவதாக அடியேனுக்குத் தோன்றுகிறது. தேவரீர் கொஞ்சம் பார்த்துச் சொல்ல வேண்டும்'.

'ஆமாம் பட்டரே. அடியேனுக்கும் அப்படியே தோன்றுகிறது. தாங்கள் நேற்று சூட்டிய திருத்துழாயைக் களைந்து வெகு நேரம் ஆகிவிட்டதா என்ன?'

'இல்லை விட்டுசித்தரே. சிறிதே நேரம் தான் ஆகியது. நமக்குத் தான் திருமாலவன் திருவிடம் மட்டுமின்றி திருத்துழாயிடமும் மால் கொண்டவன் என்று தெரியுமே. திருமுழுக்காட்டின் போதும் திருத்துழாய் மாலையை அணிவித்துத் தானே திருமுழுக்காட்டுவோம். புதிய ஆடையை இப்போது தான் அணிவித்தேன். அதற்குள் தாங்கள் வந்துவிட்டீர்கள். எம்பெருமானால் அந்த சிறிது நேரத்திற்குக் கூட திருத்துழாயைப் பிரிந்து இருக்க முடியவில்லையா? வியப்பு தான்'.

'பட்டரே. காலம் தாழ்த்தாமல் எம்பெருமானுக்குத் திருத்துழாய் மாலையைச் சூட்டுங்கள். அவன் திருமுகம் மேகம் சூழ்ந்த நிலவு போல் இருப்பதைக் காண இயலவில்லை'.

'இதோ சூட்டிவிட்டேன் பெருமானே. கொஞ்சம் பொறுத்தருளுங்கள்'.

'வடபெருங்கோயிலுடையானே. இதென்ன விந்தை?! திருத்துழாயை அணிந்த பின்னும் உன் திருமுகவாட்டம் மறையவில்லையே. பட்டரே. அனைத்து மலர்மாலைகளையும் சூட்டுங்கள். மாலவன் மனம் அப்போதாவது குளிர்கிறதா பார்ப்போம்'.

'இதோ சூட்டிவிட்டேன் பட்டர்பிரானே. இதோ சூட்டிவிட்டேன்'.

'என்ன விந்தை இது? திருத்துழாயை அணிந்த பின்னும் மாறாத திருமுகவாட்டம் மலர்மாலைகளைச் சூட்டியவுடன் மாறிவிட்டதே. என்ன வியப்பு? ஆகா. இப்போது சுவாமியின் திருமுகம் முழு மதியைப் போல் விளங்குகிறதே. ஆயிரம் கண் போதாதே. ஆயிரம் கண் போதாதே. பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வித் திருக்காப்பு'.

'ஆமாம் விட்டுசித்தரே. உண்மை தான். மாயவன் மிகுந்த மாயைகள் புரிகிறான். திருத்துழாய் அணிந்த பின்னும் மாறாத திருமுகவாட்டம் மற்ற மலர் மாலைகளைச் சூட்டியதும் மாறிவிட்டதே. வியப்பிது காண்.'

***

விஷ்ணுசித்தரும் மற்றவர்களும் எம்பெருமானைப் பணிந்து இல்லம் திரும்புகின்றனர். இதே போல பல நாட்கள் கோதை சூட்டிக் கொடுத்த மலர்மாலைகளை அணிந்து கோவிந்தன் மன மகிழ்ந்து அடியவர்களுக்கு அருள் சொரிந்து கொண்டிருக்கிறான். அவனின் திருமுக மணடலத்தில் தோன்றும் பெருமகிழ்ச்சியையும் அவன் கரியவாய திருக்கண்களையும் காண வேண்டுமா? இதோ...



***

அருஞ்சொற்பொருள்:

பட்டர்பிரான் - பாண்டியன் சபையில் பரம்பொருளை அறுதியிட்டுக் கூறியதற்காக பாண்டியன் அவையில் பெரியாழ்வாருக்குக் கொடுக்கப் பட்ட பட்டம். பட்டர்பிரான் திருக்கதையைப் படிக்க 'விஷ்ணு சித்தன்' வலைப்பூவைப் பாருங்கள்.

திருமுழுக்காட்டு - அபிஷேகத்திற்கான தமிழ்ச்சொல். வைணவர்கள் அன்று முதல் இன்று வரை அபிஷேகத்திற்குச் சொல்லும் சொல்.

பீதகவாடை - மஞ்சள் ஆடை. பீதாம்பரம் என்று வடமொழியில் சொல்லப்படுவது.

திருத்துழாய் - துளசி.

பட்டர் - அர்ச்சகர். பெருமாள் கோயில் அர்ச்சகரை பட்டர் என்றும் பட்டாச்சாரியர் என்றும் அழைப்பார்கள்.

ஆலிலைப்பள்ளியான் - எல்லா உலகங்களும் தோன்றும் முன் ஒரு குழந்தை வடிவில் ஆலிலை மேல் பள்ளி கொள்வான் பரந்தாமன். அதனால் அவனுக்கு ஆலிலைப்பள்ளியான் என்று பெயர். அது வடமொழியில் வ்டபத்ரசாயி என்று பெயர்ப்பாகும். அதுவே வில்லிபுத்தூரில் வாழும் இறைவனின் திருப்பெயர்.

விட்டுசித்தர் - விஷ்ணு சித்தர் என்னும் திருப்பெயர் தமிழில் விட்டுசித்தர் ஆகிவிடுகிறது. பெரியாழ்வாரே தன் பாடல்களில் தன்னை விட்டுசித்தன் என்றே குறித்துக் கொள்கிறார். விஷ்ணு சித்தன் பெயர் விளக்கம் 'விஷ்ணு சித்தன்' வலைப்பூவில் காண்க.

திருமுகமண்டலம் - இறைவனின் முகம். இறைவனையும் அடியார்களையும் சேர்ந்த எதனையும் திரு என்ற அடைமொழியுடன் சொல்வது வைணவ மரபு.

தேவரீர் - தெய்வத்திற்கு சமமான தாங்கள். பெரியவர்களையும் மதிக்கத் தகுந்தவர்களையும் வைணவர் அழைக்கும் சொல்.

அடியேன் - தன்னைக் குறித்துக் கொள்ள வைணவர் சொல்லும் சொல். ஒருவர் மாற்றி ஒருவர் அடியேன் என்று சொல்லிக் கொண்டு பேசுவதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும்.

மால் - மயக்கம்; திருமால் - திருவிடம் மயங்கியவன்; மயக்குபவன்.

வடபெருங்கோயிலுடையான் - வில்லிபுத்தூர் பெருமானின் திருப்பெயர்.

முடிந்தவரை கொஞ்சம் கடினமாக இருக்கும் என்று எண்ணும் சொற்களுக்கு அருஞ்சொற்பொருள் கொடுக்கலாம் என்று எண்ணுகிறேன். அதனால் பதிவைப் படிக்கும் போது ஏதாவது சொல் புரியவில்லை என்றால் பதிவின் இறுதியில் பாருங்கள். பெரும்பாலும் அந்த சொற்களுக்குப் பொருள் கொடுக்கப்பட்டிருக்கும் என்று எண்ணுகிறேன். அப்படி அடியேன் ஏதேனும் சொல்லுக்குப் பொருள் சொல்லாமல் விட்டிருந்தால் கேளுங்கள். அவற்றையும் பட்டியலில் பொருளுடன் சேர்த்துவிடுகிறேன்.

Monday, December 25, 2006

தென்பட்டான் கண்ணன்!!!

எத்தனை உருகினால் தான் என்ன? கல் நெஞ்சம் கொண்டவர்க்கு கருணை என்பதும் உண்டா? உடலைப் போல் உள்ளமும் கருத்தவன் அல்லவா அவன்? இந்த நேரத்தில் தோழியர் தொல்லை வேறு தாங்கமுடியவில்லை. என் நோய் தீர என்ன செய்வது என்று சொல்லிப் பார்த்துவிட்டேன். ஆனால் அவர்கள் அதனைப் பற்றிக் கவலைப் படுவதாகவே தெரியவில்லை. அவர்கள் எண்ணம் எல்லாம் தங்களை அலங்கரித்துக் கொண்டு ஒருவரிடம் மற்றவர் தங்கள் அழகினைக் காட்டி நிறை குறைகளைப் பேசிப் பொழுதைக் கழிப்பதிலேயே இருக்கிறது. என்னிடமும் அலங்கரித்துக் கொள்ளச் சொல்கிறார்கள். என் மனநிலையை அறிந்தவர் இந்த உலகில் எவருமே இல்லையா? தந்தையார் என் நிலையை உணர்ந்தவர் போல் சில நேரம் பேசுகிறார். மற்ற நேரங்களில் அவனுக்கு அடிமைப்பட்டு வாழ்வதே நம் கடன்; அவனை மணக்க முடியுமா என்றும் பேசுகிறார். என் துயரம் யாருக்குமே புரியவில்லையா?

'கொஞ்சம் நில்லடி கோமளவல்லி. இப்போது நீ காட்டினாயே அந்தக் கண்ணாடியை இங்கே தா. விரைவில் தா'.

'கோதை. இதென்ன விந்தை?! இது நாள் வரை அலங்கரித்துக் கொள்ள மாட்டேன் என்று எப்போதும் அழுத கண்ணீரும், கண்ணீரை இறைக்கும் கைகளுமாய் இருந்தாயே. முன்பொரு காலத்தில் 'காறை பூணும் கண்ணாடி பார்க்கும்' என்று உன் தந்தையார் உன்னைப் பார்த்துப் பாடும் படி நடந்து கொண்டாயே அந்த நாட்கள் திரும்பி வந்தனவா?'

'கோமளவல்லி. உனக்குச் சொன்னாலும் புரிவதில்லை. அந்தக் கண்ணாடியை இங்கே கொடு'

கோமளவல்லி கைக் கண்ணாடியை கோதையிடம் கொடுக்கிறாள். கோதை அதில் தன் முகம் பார்க்கிறாள்.

'கோமளவல்லி. இது கண்ணாடி தானா? இல்லை கண்ணனின் ஓவியமா? இதனைக் கண்ணாடி என்று சொல்லி சற்று முன் நீட்டினாய். அப்போது இதில் கண்ணனின் திருவுருவம் தெரிந்தது. இப்போதும் தெரிகிறது. நீ ஏன் இதனைக் கண்ணாடி என்று சொன்னாய்?'

'கோதை. உனக்கு கண்ணன் மேல் பைத்தியம் மிகவும் அதிகமாகிவிட்டது. அது கைக்கண்ணாடி தான். இப்போது தானே அதில் என் முகத்தைப் பார்த்து புருவம் திருத்தினேன். அதனைப் பார்த்து கண்ணன் ஓவியம் என்கிறாயே. என்னை விட்டுவிடடி. நான் என் இல்லத்திற்கே செல்கிறேன். உன்னோடு இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் எனக்கும் பைத்தியம் பிடித்துவிடும்'.

கோமளவல்லி அகன்று செல்கிறாள். அவள் போனபின்பு கண்ணாடியில் தெரியும் கண்ணனின் திருவுருவை கோதை பார்த்துக் கொண்டே தனக்குள் சிந்திக்கிறாள்.



'கோமளவல்லி சொல்வதும் சரி தான் போலிருக்கிறதே. இது கண்ணாடி தான். பல நாட்கள் நானும் இதில் என் முகம் பார்த்திருக்கிறேன். ஏன் இன்று என் முகம் தெரியாமல் கண்ணனின் முகம் இதில் தெரிகிறது. அதோ அந்த நிலைக்கண்ணாடியில் சென்று பார்ப்போம்.'

நிலைக்கண்ணாடியில் கண்ணனின் முழு உருவம் தெரிகிறது. இவள் என்ன செய்கிறாளோ அதனையே கண்ணன் நிலைக்கண்ணாடியில் செய்கிறான்.

'ஆகா. எத்தனை நாளாக உருகினோமோ அதற்கு பயன் கிட்டிவிட்டதா? கண்ணன் மனம் கடைசியில் இரங்கிவிட்டதா? அதனால் தான் கண்ணாடியில் காட்சி தருகிறானா? அவன் உருவத்தைக் கண்டு மனம் துள்ளுகிறதே. ஆகா அவனுக்கு ஏற்ற ஆடை அணிகலன்களை அணிவோம் என்றால் இது என்ன கண்ணாடியில் பார்த்துக் கொள்ளவே முடியவில்லையே. அவன் திருவுருவம் தானே தெரிகிறது. இது நாள் வரை கண்களில் தென்படாமல் கொடுத்தத் தொல்லை போதாதென்று இன்று கண்ணாடியில் பார்க்கும் போதெல்லாம் தென்பட்டு தொல்லை கொடுக்கிறானே. இவனை என் சொல்ல? தீராத விளையாட்டுப் பிள்ளையாக இருக்கிறானே. என்னைப் போன்ற பேதைப் பெண்களைத் தொல்லைப் படுத்திப் பார்ப்பதே இவனுக்கு வேலையாகப் போய்விட்டது.

கண்ணாடி இல்லாவிட்டால் என்ன? கைகளும் கால்களும் எங்கே இருக்கின்றன என்று தெரியாமலா போய்விட்டது. முடிந்த வரை கண்ணாடி பார்க்காமலேயே நம்மை அலங்கரித்துக் கொண்டு கண்ணாடியில் தெரியும் கண்ணன் முன் வருவோம்'.

இப்படி எண்ணிக் கொண்டு கோதை தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டு கண்ணாடியின் முன் வருகிறாள். அங்கே கண்ணனைக் கண்டு மிக மகிழ்ந்து நிற்கிறாள். அப்போது அருகில் பெருமானுக்காக விஷ்ணு சித்தர் தொடுத்து வைத்திருக்கும் மலர் மாலைகள் தென்படுகின்றன.

'என் கண்ணனுக்காகவே அப்பா இந்த மலர் மாலைகளைத் தொடுத்து வைத்திருக்கிறார். அவனுக்கு இந்த மாலைகள் தான் எவ்வளவு பொருத்தமாக இருக்கும். கண்ணாடியில் தெரியும் கண்ணனுக்கு இவற்றை அணிவித்துப் பார்ப்போம். கண்ணா, இந்தா இந்த மலர் மாலையை அணிந்து கொள்'.

கண்ணாடியில் தெரியும் கண்ணன் திருவுருவம் மலர் மாலையை அணிந்து கொள்ளவில்லை.

'கண்ணா. உன் மனம் மீண்டும் கல்லாகிவிட்டதா? கண் முன் தெரிகிறாய். ஆனால் நான் வேண்டிக் கொண்டு தரும் இம்மாலையை அணிந்து கொள்ள மாட்டேன் என்கிறாய். உன்னை என்ன தான் செய்வது?'

கண்ணன் கண் முன் தெரிவதால் கண்ணனை முன் போல் கடிய வார்த்தைகளால் கடிந்து கொள்ள கோதைக்கு முடியவில்லை. ஆனாலும் தந்தையார் மிகுந்து பக்தியுடன் தொடுத்து வைத்திருக்கும் மலர் மாலையைக் கண்ணனுக்கு அணிவித்துப் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறாள்.

'கண்ணா. நான் வருந்தி அழைத்துக் கொடுத்தாலும் மாலையை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கிறாயே. உனக்கு இந்த மாலைகளை எப்படி அணிவிப்பது என்று எனக்குத் தெரியும்'

இப்படி சொல்லிக் கொண்டே மாலைகளை ஒவ்வொன்றாக தானே அணிந்து கொள்கிறாள்.
ஒவ்வொரு மாலை அணியும் போதும் கண்ணாடியில் இருக்கும் திருவுருவமும் அந்த மாலையை அணிந்து கொள்கிறது. ஒவ்வொரு மாலையை அணிந்து கொண்டும் அவனின் திருவுருவத்திற்கு அந்த மாலை எவ்வளவு அழகாகப் பொருந்துகிறது என்று இப்படியும் அப்படியும் திரும்பித் திரும்பி அழகு பார்க்கிறாள் கோதை. இப்படி எல்லா மாலைகளையும் அணிந்து பார்த்த பின் அவற்றை திரும்பவும் குடலையில் இட்டுவிட்டு கைக்கண்ணாடியை எடுத்துக் கொண்டு மீண்டும் கண்ணன் திருமுகத்தைக் காண வேறுபுறம் சென்றுவிடுகிறாள். இவ்வளவு நாள் எங்கே சென்றிருந்தது என்று தெரியாமல் இருந்த மகிழ்ச்சி மீண்டும் அவள் முகத்தில் குவிந்திருக்கிறது.

Sunday, December 24, 2006

திருத்துழாயும் மலர்களும்

காலைக் கடன்களான வேத மந்திரங்களை ஓதி கதிரவன் உதிக்கும் திசையை நோக்கி சந்தியில் செய்யும் வந்தனங்களை எல்லாம் முடித்துக் கொண்டு இறைவனை வழுத்தி வாழ்த்தி இதோ மலர்களையும் கொய்து குடலையில் இட்டு கொண்டு வந்துவிட்டோம். இந்த அமைதியான சூழலில் இறைவனின் திருநாமங்களையும் அவன் திருவிளையாடல்களையும் எண்ணிக் கொண்டே அவனுக்காக மலர்மாலைகளைத் தொடுப்பது தான் எத்தனை இன்பம். நம்மைப் போல் மாலவனுக்கு மலர் மாலை தொடுப்பவர் எல்லோருக்கும் இது தானே பேரின்பம். இதனை விடுத்து இந்திர லோகம் சென்று அங்கே அரசாளும் இன்பம் பெற யார் தான் விழைவர்?



எல்லா நிறத்திலும் பூக்கள் நம் நந்தவனத்தில் மலர்கின்றன. ஒவ்வொன்றும் மாலவன் திருமேனியை அலங்கரிக்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் துள்ளுகின்றனவே. 'என்னை எடுக்க மாட்டாரா? மலர்மாலையில் வைத்துத் தொடுக்க மாட்டாரா? மாயவன் திருமேனியில் துலங்க மாட்டோமா? பிறவிப் பெரும்பயனை எய்த மாட்டோமா?' என்று ஒவ்வொரு மலரும் துள்ளித் துள்ளி நம் கைகளில் தானே வந்து விழுகின்றனவே?!



இந்த நீல நிற மலரை பார்த்தால் நம் நீலமேக வண்ணனின் திருநிறத்திற்கு தான் ஏற்றதாக இருப்போம் என்ற மகிழ்வும் பெருமிதமும் தெரிகிறதே. வெண்ணிறப் பூக்கள் அவன் புன்சிரிப்பு பூக்கும் போது தெரியும் பற்களின் நிறத்திற்கு தாம் பொருத்தமாக இருப்போம் என்று சொல்கின்றனவே. சிவந்த மலர்கள் அவன் திருக்கண்களின் நிறத்திற்கும் கொவ்வைச் செவ்வாயின் நிறத்திற்கும் தாங்கள் போட்டி என்று சொல்கின்றனவே. மஞ்சள் நிறப் பூக்கள் அவன் இடையில் அணிந்திருக்கும் மஞ்சள் நிறப் பட்டிற்குத் தாங்கள் தான் பொருத்தம் என்று சொல்கின்றனவே.



அட. இதென்ன இந்த பச்சை நிறத் திருத்துழாய் இலைகள் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருக்கின்றனவே. ஓ. இவற்றிற்கு தாங்கள் மலர்கள் இல்லையே; வெறும் இலைகள் தானே என்ற குறையோ? அடடா. திருமறுமார்பன் விரும்பி அணிபவை எந்த மலர்களும் இல்லையே; திருத்துழாய் மட்டும் தானே. அவற்றின் மணத்திற்கு மட்டும் தானே அவன் தன் மனத்தை இழப்பான். மற்ற மலர்களையாவது அவன் தோள்களிலும் கரங்களிலும் மட்டுமே சூடுவான். ஆனால் தன் திருமுடியில் வைத்துச் சூடிக் கொள்ளவும் தன் திருவடிகளை அழகு செய்யவும் முடி முதல் அடி வரை எங்கெல்லாம் முடிகிறதோ அங்கெல்லாம் சூடிக் கொள்ளவும் விரும்புவது திருத்துழாயை மட்டும் தானே?! ஆனால் அடியவர்கள் எப்போதும் அடக்கத்துடன் தான் இருப்பார்கள் போலும். புதியவர்கள் இறைவனுக்குத் தொண்டு செய்யக் கிடைத்த வாய்ப்பிற்காக மகிழ்ந்துத் துள்ளுவதைப் போல இந்த மலர்கள் எல்லாம் செய்கின்றன. ஆனால் ஏழாட்காலும் இறைவனுக்கே பணிசெய்து கிடந்த பழவடியார்கள் அமைதியாக அவன் திருப்பணியைச் செம்மையாகச் செய்வது போல் கிடக்கின்றன இந்த திருத்துழாய் இலைகள்.



இருக்கின்ற திருத்துழாய் எல்லாம் தொடுத்தாகிவிட்டதே. இன்னும் கொஞ்சம் வேண்டும் போல் இருக்கிறது. மலர்களே இல்லாமல் வெறும் திருத்துழாயை மட்டுமே வைத்து இன்னும் இரண்டு மாலைகள் தொடுக்க வேண்டும். தொடுத்த மாலைகளை எல்லாம் இந்தக் குடலையில் வைத்துவிட்டு இன்னும் கொஞ்சம் திருத்துழாய் இலைகளைப் பறித்து வரலாம். திருக்கோயில் வழிபாட்டிற்கு நேரமாகிவிட்டது.

***

இது விஷ்ணு சித்தரான பெரியாழ்வாரின் நிலையிலிருந்து எழுதியது.

***

அருஞ்சொற்பொருள்:

திருத்துழாய் - துளசி
விழைதல் - விரும்புதல்
ஏழாட்கால் - ஏழு தலைமுறை
பழவடியார்கள் - பழம்பெரும் அடியார்கள்
குடலை - பூக்கூடை

இன்னும் ஏதாவது சொற்களுக்குப் பொருள் தெரியாவிட்டால் கேளுங்கள்.

Saturday, December 16, 2006

அல்லல் விளைத்த பெருமான்

'ஏற்கனவே சரியான வழி, சரியான முறை என்பதெல்லாம் முறை தவறி நடக்கும் இந்த உலகத்தில், நந்தகோபன் மகன் என்று பெயரளவிலேயே இருக்கும் (ஆனால் செயலில் நந்தகோபனைப் போல் இரக்கம் கொள்ளாமல் இருக்கும்) கொடியவனும் கடியவனும் ஆன திருமகள் நாதன் என்னும் காளையின் (கார் ஏறின்) குளம்புகளால் மிதிபட்டு நார் நாராகக் கிழிபட்டு திரும்பிப் படுக்கவும் இயலாமல் கிடக்கிறேன் நான். தோழியர்களே. அவன் எங்காவது போகும் போது அவன் மிதித்த காலடி மண் தான் கொணர்ந்து வந்து பூசுங்கள். அப்படியாகிலும் என் உடம்பை விட்டு உயிர் போகாமல் இருக்கும்.

(அவன் வாடி வந்து கொள்ள வேண்டியிருக்க இவள் வாடுகிறாளே - அது முறை தவறியது என்கிறாள். யார் யார் மூலமெல்லாம் அவனை அடையலாம் என்று எண்ணினாளோ அவர்கள் எல்லாம் ஒன்றும் செய்யவில்லை; அதனால் அவர்களைக் குறை கூறுகிறாள் - 'நந்தகோபன் மகன் என்னும்' என்றும் 'திருமாலால்' என்றும் - திருமகளும் நந்தகோபனும் யசோதையும் கண்ணனை அடைய உதவுபவர்கள் அல்லவா? உயிர் போய்விடும் போல் இருக்கிறது. இப்போது இவளுக்குத் தேவையெல்லாம் அவன் காலடி மண்ணே. அது இருந்தால் போதும் திரும்பிப் படுக்கக் கூட முடியாத துன்பம் தீரும்)

நடையொன்றில்லா உலகத்து நந்தகோபன் மகன் என்னும்
கொடிய கடிய திருமாலால் குளப்புக் கூறு கொளப்பட்டு
புடையும் பெயரகில்லேன் நான் போட்கன் மிதித்த அடிப்பாட்டில்
பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள் போகா உயிர் என் உடம்பையே

'வெற்றியுடைய கருடக்கொடியோனின் ஆணையை மீறி ஒன்றும் நடக்காத இந்த உலகத்தில் மற்றவர்களுக்கு எந்த பயனும் இல்லாத வகையில் பெற்ற தாயான யசோதை இவனை முழுக்க முழுக்க வேம்பே ஆக வளர்த்திருக்கிறாளே. தோழியர்களே. (அவனை அன்றி வேறெதையும் விரும்பாத அவன் பிரிவைத் தாங்க முடியாமல் விம்மி விம்மும் என்) குற்றமற்ற முலைகளை அழகிய திரண்ட அவன் தோள்களோடு இதுவரை பிரிந்திருந்த குறை தீர அவன் மறுத்தாலும் விடாது தோளில் என் முலைகளை அணையும் படி இறுக்கக் கட்டுங்கள்.

வெற்றிக் கருளக் கொடியான் தன் மீமீதாடா உலகத்து
வெற்ற வெறிதே பெற்ற தாய் வேம்பே ஆக வளர்த்தாளே
குற்றமற்ற முலை தன்னைக் குமரன் கோலப் பணைத்தோளோடு
அற்ற குற்றமவை தீர அணைய அமுக்கிக் கட்டீரே







'தோழியர்களே. உள்ளத்தின் உள்ளே உருகி நைந்து போகிறேன். நான் உயிருடன் இருக்கிறேனா இல்லையா என்று கூட கேட்காத, என்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் கொள்ளைக் கொள்ளும் குறும்பனை மாடுகள் மேய்க்கும் இடையனைக் காணும் போது, இருப்பதால் ஒரு பயனும் இல்லாத என் கொங்கைகளை கிழங்கோடு அள்ளிப் பறித்து அவன் மார்பில் எறிந்து என் உடலிலும் மனத்திலும் எரியும் நெருப்பைத் தீர்ப்பேன்'

உள்ளே உருகி நைவேனை உளளோ இலளோ என்னாத
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக் கோவர்த்தனனைக் கண்டக்கால்
கொள்ளும் பயனொன்றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்வில் எறிந்து என் அழலைத் தீர்வேனே

'வளர்ந்த குழந்தைகளைப் போன்ற இந்த முலைகளின் இடர் தீர கோவிந்தனுக்கு ஒரு குற்றேவல் இந்தப் பிறவியிலேயே செய்யாமல் மறுபிறவியில் வைகுந்தம் சென்று அவனுக்குக் குற்றேவல் செய்யும் தவம் செய்து என்ன பயன்? சிறந்த அவனுடைய திருமார்பகத்தில் என் முலைகளை அவன் சேர்க்காவிட்டாலும் ஒரே ஒரு முறையாவது 'நான் உன்னை காதலிக்கவில்லை' என்ற உண்மையாவது என் முகத்தை நோக்கிச் சொல்லிவிட்டான் என்றால் அது மிக நல்லதாக இருக்கும்'

கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல்
இம்மைப் பிறவி செய்யாதே இனிப்போய் செய்யும் தவம் தான் என்
செம்மையுடைய திருமார்வில் சேர்த்தானேலும் ஒரு ஞான்று
மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி விடை தான் தருமேல் மிக நன்றே




துன்பங்கள் எல்லாம் விளைத்த பெருமானை திருவாய்ப்பாடிக்கு அணிவிளக்கை, வில்லிபுத்தூர் நகரின் தலைவரான விஷ்ணுசித்தரின் திருமகளான கோதை - வில்லை பழிக்கும் புருவமுடையவள் - கண்ணன் மேல் மிகவும் வேட்கை உற்று மிக விரும்பிச் சொல்லும் இந்தச் சொற்களை துதிப்பவர்கள் துன்பக்கடலுள் விழ மாட்டார்கள்

அல்லல் விளைத்த பெருமானை ஆயர்பாடிக்கு அணிவிளக்கை
வில்லி புதுவை நகர் நம்பி விட்டு சித்தன் வியன் கோதை
வில்லைத் தொலைத்த புருவத்தாள் வேட்கை உற்று மிக விரும்பும்
சொல்லைத் துதிக்க வல்லார்கள் துன்பக்கடலுள் துவளாரே

Wednesday, December 13, 2006

கண்ணன் என்னும் கருந்தெய்வம்

'தோழியர்களே. கண்ணனெனும் கருந்தெய்வத்தின் அழகையும் அவனுடன் கூடி மகிழும் காட்சியையும் எப்போதும் கண்டு கிடக்கின்றேன். புண்ணிலே புளியைப் பூசுவதைப் போல் அயலில் நின்று என்னைக் கேலி செய்யாமல் என் வருத்தத்தை அறியாமல் விலகி நிற்கின்ற அந்த பெருமான் தன் இடையில் கட்டியிருக்கும் மஞ்சள் பட்டுடையை கொண்டு வந்து என் வாட்டம் தீருமாறு வீச மாட்டீர்களா?'

கண்ணனென்னும் கருந்தெய்வம் காட்சி பழகிக் கிடப்பேனை
புண்ணில் புளிப்பெய்தாற்போலப் புற நின்று அழகு பேசாதே
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில் பீதக
வண்ண ஆடை கொண்டு என்னை வாட்டம் தணிய வீசீரே

'சிறு குழந்தையாய் ஆலிலையில் துயில் கொண்ட பரமனின் வலையில் நான் அகப்பட்டுக் கொண்டேன். வேலால் குத்துவதைப் போல் நீங்கள் விரும்பிய வண்ணமெல்லாம் பேசாதீர்கள். கோலினைக் கையில் கொண்டு பசுக்களை மேய்த்து ஆயனாகக் குடக்கூத்து ஆடியவன் திருக்குடந்தையில் பள்ளி கொண்டுள்ளான். அவன் அணிந்த குளிர்ந்த நீல நிற துளசியைக் கொண்டு என் வாசம் வீசும் கூந்தல் மேல் சூட்டுங்கள்'

பாலாலிலையில் துயில் கொண்ட பரமன் வலைப்பட்டிருந்தேனை
வேலால் துன்னம் பெய்தாற்போல் வேண்டிற்று எல்லாம் பேசாதே
கோலால் நிரை மேய்த்து ஆயனாய்க் குடந்தை கிடந்த குடமாடி
நீலார் தண்ணந் துழாய் கொண்டு என் நெறி மென் குழல் மேல் சூட்டீரே

'கஞ்சனைக் கொன்ற கருநிற வில்லைப் போன்றவன் தன் கடைக்கண் என்னும் அம்பினால் என் நெஞ்சினை ஊடுருவ நான் அதன் வெம்மையால் வேவுண்டு என் நிலையும் தளர்ந்து வாடுகிறேன். அஞ்சேல் இதோ வந்து விட்டேன் என்று கூறாத அந்த ஒருவன் என்னை வஞ்சித்தது போல் உங்களையும் வஞ்சிக்காமல் அவன் தன் மார்பில் அணிந்த வனமாலையைத் தருவானாகில் அதனை கொண்டு வந்து என் மார்பில் புரட்டுங்கள்'

கஞ்சைக் காய்ந்த கருவில்லி கடைக்கண் என்னும் சிறைக்கோலால்
நெஞ்சூடுருவ வேவுண்டு நிலையும் தளர்ந்து நைவேனை
அஞ்சேல் என்னான் அவன் ஒருவன் அவன் மார்வணிந்த வனமாலை
வஞ்சியாதே தருமாகில் மார்வில் கொணர்ந்து புரட்டீரே

(சிறைக்கோல் - சிறகுகள் உடைய கோல்; அம்பு)




'உலகத்தவரில் யார் தான் என் துன்பத்தை ஆற்ற வல்லவர்? ஆயர்பாடியில் எல்லாரையும் தன் அன்பாலும் அழகாலும் கவர்ந்து உண்ணும் கரு நிறக் காளை போன்றவன் என்னை வாட்ட வாட்டமுற்று உடல் தளர்ந்தும் உறுப்புகள் முறிந்தும் கிடக்கின்றேன். உங்களால் ஏதாவது உதவி செய்ய முடியும் என்றால், தெவிட்டாத அமுதம் போன்றவனின் அமுத வாயில் ஊறிய நீர் தான் கொண்டு வந்து என் உடல் காய்ந்து போய் விடாமல் என் உடல் மேல் தெளித்தும் நான் உண்ணக் கொடுத்தும் என் இளைப்பை நீக்குங்கள்'

ஆரே உலகத்து ஆற்றுவார் ஆயர்பாடி கவர்ந்துண்ணும்
கார் ஏறு உழக்க உழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை
ஆராவமுதம் அனையான் தன் அமுத வாயில் ஊறிய
நீர் தான் கொணர்ந்து புலராமே பருக்கு இளைப்பை நீக்கிரே

(யாராவது எச்சிலை ஏந்தி வர முடியுமா? கோதையின் உள்மன ஆசை அவர்கள் கோவிந்தனையே அழைத்துக் கொண்டு வரவேண்டும் என்பதே. அப்படி அழைத்க்டுக் கொண்டு வந்தால் அவன் அமுத வாய் ஊறிய நீரை இவள் ஆசை தீரப் பருகலாமே)

'சாதாரணமாக அவனை எண்ணத்தில் கொண்டு அழுதாலும் என்றுமே அவனை வேண்டித் தொழுதாலும் தன் உருவத்தை அவன் காட்ட மாட்டான். அஞ்சாதே இதோ வந்தேன் என்றும் சொல்ல மாட்டான். அப்படிப்பட்ட அவன் ஒருவன் என்னைத் தழுவி என்னுள் மூழ்கி என்னைச் சுற்றிச் சுழன்று என்னைவிட்டுப் போக மாட்டேன் என்று கிடந்தான். அவனை இப்போது காண முடியாமல் தவிக்கிறேன். இலைகளும் தழைகளும் சூழ்ந்த கானகத்தின் உள்ளே பசுக்களின் பின்னால் நெடிய மால் குழல் ஊதிக் கொண்டு வருவான். அந்தக் குழலில் துளைகளின் வழி அவன் வாய் நீர் வரும். அதனைக் கொண்டு வந்து என் முகம் குளிரத் தடவுங்கள்'

அழிலும் தொழிலும் உருக்காட்டான் அஞ்சேல் என்னான் அவன் ஒருவன்
தழுவி முழுகிப் புகுந்து என்னைச் சுற்றிச் சுழன்று போகானால்
தழையின் பொழில் வாய் நிரைப்பின்னே நெடுமால் ஊதி வருகின்ற
குழலின் தொலைவாய் நீர் கொண்டு குளிர முகத்துத் தடவீரே

Sunday, December 10, 2006

யத் பாவம் தத் பவதி

சாந்தீபனி முனிவர் ஆசிரமத்தில் கண்ணனுடனும் பலராமனுடனும் கழித்த மாணவப் பருவத்தினை எண்ணிக் கொண்டு அவனைப் பார்த்து உதவி கேட்க வந்துவிட்டேன். அவனைப் பார்க்க முடியுமோ இல்லையோ? இருபத்தி நான்கு குழந்தைகளைப் பெற்று கடுமையான வறுமையில் இருப்பதால் என் இயற்பெயரான சுதாமன் என்பதே மறைந்து எல்லோரும் என்னை இப்போது குசேலன் என்று அழைக்கும் நிலையில் நான் இருக்கிறேன். எந்த முகத்தை வைத்துக் கொண்டு கண்ணனைப் பார்க்க வந்தேனோ தெரியவில்லை. சிறு வயதிலேயே செயற்கரிய செயல்களைச் செய்து தான் இறைவன் என்பதைப் பலமுறைக் காட்டிய என் அன்பு நண்பன் அப்போது என்னால் எளிதாக அணுகும் படி இருந்தான். இப்போதோ துவாரகைக்கு அதிபதியாக கட்டுக்காவல் மிகுந்த கோட்டைக்குள் வாழ்ந்து வருகிறான். என் தோற்றத்தைப் பார்த்தால் யார் தான் நான் துவாரகாதீசனின் நண்பன் என்று ஒத்துக் கொள்வார்கள். எல்லாம் கண்ணன் விட்ட வழி.

***

இதோ துவாரகையின் முதல் வாயில் வந்து விட்டது. காவலர்கள் என்னை உள்ளே அனுமதிப்பார்களோ இல்லையோ தெரியவில்லையே?! இதென்ன விந்தை. அடியேனைப் பார்த்தவுடன் தலை தாழ்த்தி வணங்கி மதிற்கதவைத் திறந்து விடுகிறார்களே. கண்ணன் பெயர்களைச் சொல்லி 'ஜய விஜயீ பவ' என்று கோஷங்களும் இடுகின்றனர். ஆகா. என்னே இவர்களின் கிருஷ்ண பக்தி. எப்போதும் கண்ணன் நாமம் சொல்கிறார்கள்.

***

ஏழாவது வாயிலும் வந்தாகிவிட்டது. இது வரை எந்த வாயிலிலும் காவலர்கள் என் தோற்றம் கண்டு என்னைத் தடுத்து நிறுத்தவில்லை. ஆண்டி அரசன் என்ற பிரிவுகளே துவாரகையில் இல்லை என்பதை எவ்வளவு நன்றாகத் தங்கள் செயல்களிலும் காட்டுகிறார்கள் துவாரகைவாசிகள். ஆண்டியான என்னை ஒவ்வொரு வாயிலிலும் தங்கள் அரசரை வரவேற்பது போல் அல்லவா வரவேற்று உள்ளே அனுமதித்தார்கள். இந்த வாயிலிலும் அனுமதி பெறுவது எளிதாகத் தான் இருக்கும். அதில் ஐயமே இல்லை. அதோ கண்ணனே தன் தேவியர்களுடன் வருகிறானே அடியேனை எதிர்கொண்டழைக்க. என்னே கண்ணனின் சௌலப்யம் (எளிவந்த தன்மை)!


***

முதல் வாயில். காவலர்களில் ஒருவரும் கோட்டைக் காவல் தலைவரும் தங்களுக்குள் பேசிக் கொள்கின்றனர்.

காவலர் 1: கோட்டைக் காவல் தலைவரே! நம் சுவாமி கோட்டையை விட்டு வெளியே சென்றதாகவே தெரியவில்லையே. இப்போது தனியாக எந்த வித பரிவாரமும் இன்றி தேர், புரவி என்ற எந்த வாகனமும் இன்றி நடந்து கோட்டைக்குள் நுழைகிறாரே? இது என்ன விந்தை?

கோட்டைக்காவல் தலைவர்: ஆமாம் காவலரே! எனக்கும் அது மிக விந்தையாகத் தான் இருக்கிறது. நான் அறிந்த வரை சுவாமி கோட்டைக்குள் தான் இருக்கிறார். அதனால் சுவாமியைக் கண்டவுடன் எனக்கும் மிக விந்தையாக இருந்தது. அதுவும் நீங்கள் சொன்னது போல் ஐயன் தனியாக வருவதைக் கண்டு ஒன்றுமே புரியவில்லை. ஆனால் நம் சுவாமி மாயைகளில் வல்லவராயிற்றே. அவரை நாம் என்ன கேட்பது? எந்தக் கேள்வியும் கேட்காமல் துவாரகாதீசனிடம் தகுந்த மரியாதையுடன் நடந்து கொள்வது தானே நம் கடமை.

அதோ ஒரு ரிஷி வருகிறார். அவரிடம் வேண்டுமானால் நம் ஐயத்தைக் கேட்டுக் கொள்ளலாம்.

வணக்கம் சுவாமி.

ரிஷி: வாழ்த்துகள்.

கோட்டைக் காவல் தலைவர்: சிறிது நேரத்திற்கு முன்பு நம் கண்ணன் இந்த வழியாகக் கோட்டைக்குள் சென்றார். அடியோங்கள் அறிந்த வரை அவர் கோட்டையிலேயே தான் இருக்கிறார். அதனால் அவர் வெளியிலிருந்து உள்ளே செல்வதைப் பார்த்து நாங்கள் திகைத்து நிற்கிறோம். தாங்கள் தான் தயை செய்து எங்கள் மயக்கத்தைத் தீர்க்க வேண்டும்.

ரிஷி: கோட்டைக் காவல் தலைவரே. நீங்கள் சொல்வது உண்மை தான். மாயக்கண்ணன் கோட்டைக்குள்ளேயே தான் இருந்தார். உள்ளே வந்தது கிருஷ்ணன் இல்லை. அவர் நம் அழகிய நம்பியின் நண்பர். சிறுவயதுத் தோழர். குசேலன் என்று பெயர் பெற்ற சுதாமன். என்றும் கிருஷ்ண தியானத்திலேயே இருப்பதால் அவர் முழுவதும் கிருஷ்ண மயமாகவே ஆகிவிட்டார். அதனால் அவரைப் பார்ப்பவர்களுக்கு அவர் கண்ணனாகவே தோற்றம் அளிக்கிறார்.

கோட்டைக் காவல் தலைவர்: அப்படியா? ஆகா. சரியாக விசாரிக்காமல் கோட்டைக்குள் அனுமதித்துவிட்டோமே. உடனே உள் வாயில் அதிகாரிகளிடம் சொல்ல வேண்டும்.

ரிஷி: கோட்டைக் காவல் தலைவரே. பதட்டம் வேண்டாம். குசேலர் வரவைக் கண்ணன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார். இந்த நேரத்தில் அவரே குசேலரை எதிர் கொண்டழைத்து உள்ளே கூட்டிச் செல்கிறார். எந்த வித பதட்டமும் வேண்டாம். அவரது அருமை நண்பரை காலம் தாழ்த்தாமல் உள்ளே அனுமதித்ததற்கு அவர் மகிழ்ச்சியே அடைவார். நானும் இரு நண்பர்கள் அளவளாவுவதைக் காணவே ஓடோடி வந்தேன்.

கோட்டைக் காவல் தலைவர்: தங்கள் பெயரை அடியேன் தெரிந்து கொள்ளலாமா சுவாமி.

ரிஷி: அடியேன் கிருஷ்ண த்வைபாயனன் என்னும் வேத வியாசன்.

Monday, December 04, 2006

சிற்றஞ்சிறுகாலை

மனம் மிக மிக அமைதியாக இருக்கிறது. துயில் கொள்ளச் சென்ற போது மனதில் ஆயிரம் எண்ணங்கள் இருந்தாலும் துயில் நீங்கி எழும் போது எந்த எண்ணங்களும் இல்லாமல் மனம் நிர்மலமாக இருக்கிறது. அப்போதைக்கு இப்போதே சொல்லி வைக்கும் வழக்கம் இருப்பதால் எழுந்தவுடன் 'ஹரி ஹரி' என்று தானாகவே வாய் முணுமுணுக்கிறது. அப்படி முணுமுணுத்ததே மனதில் மாயவனைப் பற்றிய எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது. அதுவே நாளின் முதல் எண்ணமானதால் நாள் முழுதும் தங்கும் எண்ணமாகவும் ஆகிறது. ஆகா. என்னே மாதவனின் கருணை. என்னையும் ஒரு பொருட்டாக எண்ணி என் மனத்தில் தங்கி அவனை எப்போதும் நினைக்கும் நிலைக்கு என்னை ஆளாக்கிவிட்டானே.

இதோ அடுத்த தெருவில் இருக்கும் ஆயர்களின் பசுக்களும் எருமைகளும் மேய்ச்சலுக்குக் கிளம்பிவிட்டன. அந்த ஆவினங்கள் இந்தத் தெரு வழியாகத் தான் செல்லும். அப்படி செல்லும் போது கோதை பார்த்துவிட்டால் போதும். கண்ணா கண்ணா என்று முனகிக் கொண்டே செயலறியாது நின்று விடுகிறாள். சில நேரங்களில் அந்த ஆவினங்களின் பின்னால் போகும் இடைச்சிறுவனைக் கண்டு மயங்கிவிழுகிறாள். சில நேரங்களில் அந்த ஆவினங்களைத் துரத்திச் சென்றால் கண்ணனைக் காணலாம் என்று சொல்லிக் கொண்டு பின் தொடர முயல்கிறாள். அதனால் அவள் என்ன செய்கிறாள் என்று பார்க்கவேண்டும்.

இன்னும் சரியாகப் புலரவில்லையே. கதிரவனைக் காண முடியவில்லை. ஆனால் கிழக்கில் சிறிது வெளிச்சம் தெரிகிறது. இது போதுமே மேய்ச்சலுக்கு கிளம்ப. அப்படி மேய்ச்சலுக்குப் போகும் பசுக்களின் குளம்பினால் மேல் எழும்பிய தூசி உடலில் பட்டால் எல்லாப் பாவங்களும் தீர்ந்துவிடும் என்றல்லவா மேலோர் சொல்லியிருக்கின்றனர். அந்தக் கோதூளியையும் நம் உடம்பில் தாங்கிக் கொள்ளலாம். உடனே விரைந்து வாசலுக்குச் செல்லவேண்டும்.

***

நல்லவேளை. கோதை ஏதோ காரியமாக வீட்டுக்குள்ளேயே இருக்கிறாள். இன்று வாசலுக்கு வரவில்லை. அதனால் அவளைக் கட்டி வைக்க வேண்டிய ஒரு வேலை குறைந்தது. தாயில்லா அந்தப் பெண்ணை கொஞ்சம் செல்லம் கொடுத்துத் தான் வளர்த்துவிட்டேன் போலும். சொற் பேச்சைக் கேட்பதே இல்லை. திருமணம் செய்து கொள் என்றால் 'மானிடவர்க்கென்று பேச்சுப்படின் வாழகில்லேன் காண்' என்கிறாள். எல்லாம் கண்ணன் விட்ட வழி என்று அவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு இருக்கிறேன்.

இதோ பசுக்களும் எருமைகளும் கழுத்தில் மணிகள் ஒலிக்க நம் வீட்டைக் கடந்து சென்றுவிட்டன. தினமும் அதிகாலையில் இவற்றின் திருமுகத்தில் முழிக்க வழிவகை செய்யும் இந்த இடைச்சிறுவன் நன்றாக இருக்க வேண்டும். ஆயிரம் பொன் கொடுத்தாலும் கோ தரிசனம் கிடைப்பது எளிதல்லவே.

விரைவில் நித்ய கடமைகளை இயற்றிவிட்டு இறைவனுக்காக மலர் மாலை தொடுக்க வேண்டும். திருக்கோவிலைத் திறக்க இதோ கையில் கோவிற்சாவியுடன் அர்ச்சகரும் கிளம்பிவிட்டார். இப்போது தொடங்கினால் தான் அவர் நிர்மால்ய தரிசனத்தை நிறைவு செய்யும் போது மலர் மாலையுடன் நாம் மாலவன் திருமுன்பு நிற்க முடியும்.

***

கண்ணன் நினைவிலேயே காலங்கள் கழிகின்றன. அல்லும் பகலும் அவன் நினைவே. வந்தாய் போலே வாராதாய்; வாராதாய் போல் வருவோனே என்று நம் குலமுதல்வர் சரியாகத் தான் பாடியிருக்கிறார். திடீரென்று பக்கத்தில் அவனது வேணுகானம் கேட்கிறது; ஓடிப் போய் பார்த்தால் அவன் புன்சிரிப்புடன் நின்று கொண்டிருக்கிறான்; அருகில் சென்றாலோ மறைந்துவிடுகிறான். எப்போதும் எதைப் பார்த்தாலும் அவன் நினைவாகவே இருக்கிறது. உடல் மெலிந்துவிட்டதாக தோழியர் கூறுகிறார்கள். உண்ணும் சோறு, பருகும் நீர் எல்லாமே கண்ணன் என்று நான் இருக்க நான் மெலிவதாவது? அறியாப் பெண்கள். அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. தலை நோவும் வயிற்று வலியும் தனக்கு வந்தால் தானே தெரியும்.

அவனுக்கு ஏற்றவளாக என்னை மாற்றிக் கொண்டால் அவன் வந்துவிடுவான். இப்படி எண்ணிக்கொண்டு கண்ணில் மையிடலாம் என்று எடுத்துவைத்துக் கொண்டு பல நாழிகை சென்றுவிட்டது. கருநிற மையைக் கண்டவுடன் மைவண்ணன் முகம் எதிரில் வந்து நிற்கிறதே. கருநிறம் கொண்ட எதனையும் இனிமேல் காணக்கூடாது. குவளை மலரை நம் நந்த வனத்தில் வெகு தூரத்தில் வளர்க்க ஏற்பாடு செய்தாகிவிட்டது. இந்த காக்கைகளையும் குயில்களையும் தான் என்ன செய்வது என்று தெரியவில்லை. அடிக்கடி முன்னால் வந்து தங்கள் அழகு நிறத்தைக் காட்டி என்னை வாட்டுகின்றன.

காக்கைகளையும் குயில்களையும் கூட விரட்டிவிடலாம். ஆனால் இந்த பச்சை நிற மரங்களையும் நீல நிற வானத்தையும் கருநிற கார்மேகங்களையும் என்ன செய்வது? எந்த திசை நோக்கினாலும் எதாவது ஒன்று அவன் நினைவைக் கொண்டு வருகிறதே. ஆ.ஆ. காதல் நோய் மிகக் கொடிது. இந்த வளையல்களின் தொல்லை வேறு. கைகளில் நிற்கவே மாட்டேன் என்கிறது. தோழியர் அதற்கும் நான் மெலிந்தது தான் காரணம் என்கின்றனர். எதாவது ஒரு காரணம் போதும் இவர்களுக்கு - உணவும் உறக்கமும் எவ்வளவு முக்கியம் என்று உபதேசம் செய்யத் தொடங்கிவிடுவார்கள். உண்ணும் உணவும், உடுக்கும் உடையும், இருக்கும் இடமும் எல்லாம் கண்ணனே என்று இருக்கும் நம் தந்தையும் என் நிலையை புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்.